Feb 7, 2012

முருகனின் 12 கரங்களின் பணிகள்!

                               







      
முதல் கை - தேவர், முனிவர்களைப் பாதுகாக்கிறது

இரண்டாம் கை - முதல் கை செய்யும் பணிக்கு ஒத்தாசை செய்கிறது

மூன்றாம் கை - உலகத்தை தன் கைக்குள் அடக்குகிறது


நான்காம் கை - தேவையற்ற ஆசைகளைக் களைகிறது


ஐந்தாம் கை - நிறைந்த அருளைத் தருகிறது


ஆறாம் கை - வேல் கொண்டு பக்தர்களைப் பாதுகாக்கிறது


ஏழாம் கை - சரவணபவ என்னும் சொல்லுக்குரிய பொருளை முனிவர்கள் போன்ற தவப்புதல்வர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் மார்பில் உள்ளது


எட்டாம் கை - மார்பில் இருந்து தொங்கும் மாலையைத் தாங்குகிறது
ஒன்பதாம் கை - யாகபலனை ஏற்கிறது


பத்தாம் கை - இதுவும் யாகபலனை ஏற்கிறது


11ம் கை - மழை தருகிறது


12ம் கை - வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது


இருவருக்கும் பிறந்த பிள்ளை: முருகன் தாயின் மூலமாக பிறக்காமல், தந்தை ஒருவரால் மட்டுமே பிறந்தவர் என்று எண்ணுகிறோம். இது சரியானதல்ல. அசுரன் ஒருவன் சிவனிடம், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் அழிந்துவிட வேண்டும் என வித்தியாசமான வரத்தை பெற்றிருந்தான். அவன், சிவனது தலை மேலேயே கை வைக்க வந்தான். அவர் மறைந்து கொண்டார். பின்னர் அவன் பார்வதிதேவியின் தலை மீது கை வைக்க ஓடினான். அவள் சரவணப் பொய்கை தீர்த்தமாக மாறிவிட்டாள். சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி சரவணப் பொய்கையில் இட்டார். அதிலிருந்து முருகன் அவதரித்தார். இதன் மூலம் முருகன் தன் தந்தை, தாயிடமிருந்து தோன்றினார் என்பது புலனாகிறது. இதனால் முருகனை சிவசக்திபாலன் என்றும் அழைப்பார்.

அறுபடை வீடுகளை அறிவிக்கும் நூல்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என்னும் ஆறுதலங்களும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் ஆகும். மனிதனின் உடலில் ஆறு ஆதாரங்களாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவை இருப்பது போல, முருகனின் இப்படை வீடுகள் திகழ்கின்றன. முருகப்பெருமானின் வாழ்க்கை வரலாற்றினை இந்த ஆறுதலங்களில் அடக்கிச் சொல்வர். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் இந்த ஆறுபடை வீடுகளின் சிறப்பை மிக விரிவாகக் கூறுகிறது.

திருஆவினன்குடி சிறப்பு: குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், திருஆவினன்குடி என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார். பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னத்தின்மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. பழநிக்கு வரும் பெண்கள், மலை பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக் கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள்.

மூன்றாம் படைவீடு: பழநிமலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே மூன்றாம் படை வீடு ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால், வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால், கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்குள்ள பெரியாவுடையாரைத் தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். பெரியநாயகி அம்மன் கோயிலில் தான் தைப்பூசக்கொடியேற்றமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பூசத்தன்று தேரோட்டமும் இந்த கோயிலின் ரதவீதிகளில் தான் நடக்கும். இக்கோயிலில் உள்ள உற்சவர் முத்துக்குமார சுவாமி( முருகன்) தைப்பூச விழா நாட்களில் வீதியுலா வருவார்.

வேலாயுதருக்கு அன்னாபிஷேகம்: பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடன் ஆண்டியாகவும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம். ஐப்பசி பவுர்ணமியன்று, சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் செய்யப்படும். பழநியில் முருகனுக்கு அன்னாபிஷேகம் உண்டு. ஆனி கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

தம்பியைக் காத்த அண்ணன்: சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரைக் காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக் கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாகவடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார்.  இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சந்நிதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். சர்ப்பவிநாயகர் என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் பாதவிநாயகர் இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். விநாயகருக்கு பின்புறம் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.


No comments:

Post a Comment